உலகம்

புதிய பொருளாதார தடை: ஈரானுடனான எங்கள் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது- சீனா எச்சரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

புதிய பொருளாதார தடை விவகாரத்தில் ஈரானுடனான எங்கள் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்க போர் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் அந்நாட்டை பொருளாதார ரீதியாக முடக்கும் வகையில் புதிய பொருளாதார தடைகளை நேற்று விதித்தது.

ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் ஆபரேசன் பொருளாதார புறக்கணிப்பு என்ற நடவடிக்கையை அறிவித்துள்ள அமெரிக்கா, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தது. மற்ற நாடுகளிடம் இருந்து ஈரானை தனிமைப்படுத்த இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் ஈரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ள சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:-

ஈரானுடனான சீனாவின் ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். சீனாவின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம். அமெரிக்காவின் இந்த தடைகள் சட்டவிரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமானது.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச சட்டத்தில் எந்த அடிப்படையோ அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரமோ இல்லை. இந்த தடைகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது. பொருளாதாரப் போர் மற்றும் அதிகபட்ச அழுத்தம் ஆகியவை எந்தத் தீர்வையும் அளிக்காது.

அவை பதற்றத்தை அதிகரிக்கவும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதி ஒழுங்கைச் சீர்குலைக்கவும், மற்ற அனைவரின் நலன்க ளையும் பாதிக்கவுமே பயன்படும். எனவே பேச்சுவார்த்தை மட்டுமே முன்னேறுவதற்கான ஒரே சரியான வழியாக இருக்கும். சீனா-ஈரான் இடையேயான ஒத்துழைப்பு தடை செய்யப்படவோ அல்லது பலவீனப்படுத்தப்படவோ கூடாது. ஈரானுடனான சீனாவின் வர்த்தகத்தில் அமெரிக்கா தலையிட கூடாது.

அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஈரானுடன் வர்த்தகம் செய்த நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதில் 4 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் 3 இந்தியர்களுக்கும் அமெரிக்கா தடை விதித்து இருக்கிறது.