சீனாவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இங்கிலாந்து நாட்டிற்கு, புதிய கடல்வழித் தடமான ஆர்டிக் கடல்வழி மூலமாக வெறும் 20 நாட்களில் சென்றது. இந்த கப்பல் மத்திய கிழக்கு கடல்வழியாக பயணித்தபோது 36 நாட்களில் இங்கிலாந்துக்கு சென்றிருந்த நிலையில், தற்போது அதைவிட குறுகிய காலத்தில் சென்றுள்ளது.
சீனாவை சேர்ந்த 574 அடி நீளமுள்ள சரக்கு கப்பலான ‘துபாய் டவர்’, அந்நாட்டின் கிங்க்டோவில் இருந்து இங்கிலாந்தின் டீஸ்போர்ட் நகருக்கு கடந்த வாரம் மத்திய கிழக்கு கடல் வழியாக பயணம் மேற்கொண்டது.
அப்போது மத்திய கிழக்கு வழித்தடம் வழியாக பயணிப்பதற்கு, சுமார் 36 நாட்கள் ஆனது. இந்த நிலையில் ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளில் ரஷியாவுடன் இணைந்து கடலோர காவல் ரோந்து பணிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.
தொழில்நுட்ப திட்டங்களை ஆராய்வது மற்றும் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான பயணங்களில் தூரத்தை குறைக்கக்கூடிய கப்பல் போக்குவரத்துக்கான குறுகிய வழியை சோதிப்பது என ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
ஆர்டிக் பெருங்கடலில் இருந்து சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் சீனா அமைந்துள்ளது.
இந்த நிலையில் துபாய் டவர் என்ற சீன சரக்கு கப்பல் கடந்த ஆகஸ்ட் 19 அன்று சீனாவில் இருந்து ஆர்டிக் பெருங்கடல் வழியாக இங்கிலாந்துக்கு சென்றது.
இந்த பயணத்தின்போது 12,000 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்பட்டு, சுமார் 3 வாரங்களில் இங்கிலாந்து நாட்டிற்கு சீன சரக்கு கப்பல் சென்றடைந்தது.
இந்த புதிய வழித்தடம் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தவிர்க்க உதவினாலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டுமே ஆர்டிக் பெருங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆர்டிக் காலநிலையின்போது உருவாகும் பனிப்பாறைகளை உடைப்பது கப்பல்களுக்கு சவாலாக இருக்கும்.
மேலும் இந்த வழித்தடத்தின் பெரும்பாலான பகுதி ரஷியாவின் வடக்கு கடற்கரையோரமாக அமைந்துள்ளதால், அதை பயன்படுத்தும் நிறுவனங்கள் ரஷியாவிற்கு அதற்கான கட்டணங்களை செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.
1990-களில் சீனா தனது ஆர்க்டிக் ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்தி, வட துருவத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டதிலிருந்தே, அது ஆர்க்டிக் பகுதியில் ஆர்வம் காட்டி வருகிறது.
வடக்கு கடல் வழித்தடத்தின் பெரும்பகுதியை ரஷியா கட்டுப்படுத்தி வருவதால், கடல்வழி சீனப் போக்குவரத்து என்பது கட்டணங்கள் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயுடன், ரஷியாவிற்கு சீனாவுடனான ஓர் உறவையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.