உலகம்

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை - கனடா அதிரடி

இதுவே போதும். அடிப்படைப் பாதுகாப்பு நடைமுறையில் இருக்க வேண்டும்.

நிறுவனங்கள் தங்கள் தளங்களைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்காத வரையில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யக்கூடிய ஒரு சட்டத்தை கனடா அறிமுகப்படுத்தியது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்குவதற்கான வளர்ந்து வரும் உலகளாவிய முயற்சியில் கனடாவும் இணைகிறது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தால், சமூக ஊடகதளங்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று கனடா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நாம் நமது பிள்ளைகளை கைவிடுகிறோம். போதும், இதுவே போதும். அடிப்படைப் பாதுகாப்பு நடைமுறையில் இருக்க வேண்டும்," என்று கனடாவின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் கூறினார்.

குழந்தைகளை தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்ள தூண்டும் உள்ளடக்கம், வன்முறையை தூண்டி வெறுப்பை வளர்க்கும் உள்ளடக்கம் மற்றும் அனுமதியின்றி எடுக்கப்பட்ட அந்தரங்க படங்கள் உள்ளிட்ட ஏழு வகையான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது.

கனடாவின் டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்படும். விலக்குகள் எப்படி இருக்கும் என்பதற்கான அளவுகோல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று மில்லர் கூறினார்.

தளங்கள் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும் என மில்லர் கூறினார். வயது சரிபார்ப்பும் ஏற்படுத்தப்படும்.

ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள், குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கு வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட மற்ற நாடுகள் இதேபோன்ற அணுகுமுறைகளை ஆராய்ந்து வருகின்றன அல்லது உருவாக்கி வருகின்றன. கனடாவில் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை வழங்கும் தளங்கள் விலக்கு பெற முடியாது.