நியூசிலாந்தின் 29 வயதான மாவோரி ராணி இங்கிலாந்துக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, வியாழக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸுடன் "மனம் விட்டுப் பேசும்" கலந்துரையாடலை நடத்தினார்.
தே அரிகினுய் தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு 2024-ல் முடிசூட்டப்பட்டார் - இதன் மூலம் அவர் இரண்டாவது மாவோரி ராணியானார்; முதல் ராணி அவரது பாட்டியான தே அரிகினுய் டேம் தே அதாயிரங்கிகாஹு ஆவார்.
தே அரிகினுய் ராணியான பிறகு, பிரிட்டிஷ் மன்னருடனான அவரது முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்த வாரத் தொடக்கத்தில், மாவோரி ராணியை வின்ட்சர் கோட்டையில் இளவரசர் வில்லியம் வரவேற்றார். இளவரசர் வில்லியம் இந்த வருகையை ஏற்றுக்கொண்டு, "ராணியைச் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது" என்று கூறினார்.
இந்தக் கலந்துரையாடல்களில் மறைந்த மாவோரி மன்னரின் மறைவு குறித்த நினைவுகளும்,வைடாங்கி உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்த உரையாடல்களும் இடம்பெற்றன.
நியூசிலாந்தின் ஸ்தாபக ஆவணங்களில் ஒன்றான வைடாங்கி உடன்படிக்கையில் முறைப்படுத்தப்பட்ட, நியூசிலாந்தின் பழங்குடி மக்களுக்கும் அரசிற்கும் இடையிலான ஏறக்குறைய 200 ஆண்டுகால உறவை இந்த வருகை குறிக்கிறது.
ஒப்பந்தத்தின் இருநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும் உலகின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக சவால்களைத் தீர்க்க உதவுவதில், பழங்குடி அறிவின் சக்தி மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பொறுப்புணர்வின் மீதான தனது நம்பிக்கையை தே அரிகினுய் உறுதிப்படுத்தினார்.
நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ அரசுத் தலைவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என்றாலும், மாவோரி ராணி ஒரு தனித்துவமான, பாரம்பரியமான மற்றும் மதிப்புமிக்க பதவியை வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.