ஈரான் - அமெரிக்கா மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவிய நிலையில் இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா இடையே மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்பட்டு, மற்ற இரண்டு நாடுகளும் தாக்குதலில் இறங்கும்.
இந்நிலையில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது வங்கதேசம். வங்கதேச பிரதமரின் வெளியுறவு விவகார ஆலோசகர் ஹுமாயூன் கபீர், தங்களின் சொந்த தேசிய நலன்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார வர்த்தக மாற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
2024-ல் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனது பாரம்பரிய நட்பு நாடான இந்தியாவுடன் உறவு தற்போது கசந்துள்ளது. இதனால் இந்தியாவை மட்டும் சார்ந்திருக்காமல், தனது மூலோபாயக் கூட்டாளிகளைப் பலப்படுத்த வங்கதேசம் முயன்றுவருகிறது.
வங்கதேசம் தற்போது பாகிஸ்தானுடன் வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சீனாவுடனும் தனது உறவை ஆழப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வங்கதேசம் இந்த நகர்வு குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், இஸ்லாமிய நாடுகளில் அணுஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடு. துருக்கி நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவப் படையைக் கொண்ட மற்றும் மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடு.
பலமான பொருளாதார நிதி ஆதாரங்கள் மற்றும் பிராந்திய செல்வாக்கைக் கொண்ட நாடு சவுதி அரேபியா.