Apache Helicopter  
உலகம்

அப்பாச்சி ஹெலிகாப்டர் விவகாரம் - அடித்துக்கொள்ளும் அமெரிக்கா, ஈரான்..

ஹார்முஸ் நீரிணையில் கடலில் விழுந்த அமெரிக்க ஹெலிகாப்டர்; பைலட்டுகள் பத்திரமாக மீட்பு. அமெரிக்காவின் தாக்குதலுக்கு 21 தளங்களை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி!

ஓமன் கடற்கரைக்கு அருகே உள்ள சர்வதேச கடல் பகுதியில் (ஜூன் 8) அன்று அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன 'அப்பாச்சி' ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து வளைகுடா பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

வளைகுடா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்தது.

விபத்து நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் அமெரிக்க கடற்படை, விமானப்படை மற்றும் 82-வது ஏர்போர்ன் பிரிவினர் இணைந்து அதிவேக மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

ஹெலிகாப்டரில் இருந்த இரு ஊழியர்களும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த ஹெலிகாப்டர் ஈரானின் தாக்குதலால் சுட்டுக் கொல்லப்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக விழுந்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்த விபத்திற்கு ஈரான்தான் காரணம் என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார், மேலும் இதற்கு அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் நீரிணையை சீனா மற்றும் பிற வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் மூடியுள்ளது.

இதை முறியடிக்க அமெரிக்கா தனது அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் MQ-9 ரீப்பர் ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஏப்ரல் 13 முதல் அமெரிக்காவும் ஈரான் மீது கடல்வழித் தடையை விதித்துள்ளது.

இதுவரை ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 134 வணிகக் கப்பல்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளதுடன், தடையை மீறிய 7 கப்பல்களைச் செயலிழக்கச் செய்துள்ளது.

இந்த வளைகுடா போரில் இதுவரை அமெரிக்காவின் சுமார் 30 ரீப்பர் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன, மேலும் சில போர் விமானங்களும் இழக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த மோதலில் அமெரிக்கா தனது வலிமைமிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை இழப்பது இதுவே முதல் முறையாகும்.