உலகம்

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்களுக்கு மத்தியில் அலி கமெனி உடல் நல்லடக்கம்

அவரது மகனும் வாரிசுமான மொஜ்தபா கமெனி பொதுவெளியில் தோன்றியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கு வெள்ளிக்கிழமை அன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டு நாட்களாக தொடரும் அமெரிக்க மற்றும் ஈரானிய தாக்குதல்கள், மீண்டும் ஒரு முழுமையான போர் மூளக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

கிழக்கு ஈரானில் உள்ள அவரது சொந்த நகரமான மஷ்ஹத்தில், இமாம் ரெஸாவின் ஆலயத்திற்குள் கமெனியின் கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டி தூக்கிச் செல்லப்பட்டது.

வெளியே திரளான மக்கள் காத்திருந்து பிரார்த்தனைகளை கேட்டு கொண்டிருந்தனர். அவரது மகனும் வாரிசுமான மொஜ்தபா கமெனி பொதுவெளியில் தோன்றியதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

நல்லடக்கம்:

"இஸ்லாமிய புரட்சியின் தியாகி தலைவரின் உடல், இமாம் ரெஸாவின் தர்கா நினைவு மண்டபத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது" என அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் படைகளின் பதிலடி தாக்குதல்கள் இரண்டாவது நாளாக தொடர்ந்த நிலையில், இந்த அடக்கம் நடைபெற்றது.

இந்த மோதல்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் தெஹ்ரான் மற்றும் மஷ்ஹத்து இடையிலான ரயில் பாதையை குறிவைத்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

எட்டு ஏவுகணைகள்:

குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க சொத்துக்களை குறிவைத்து தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்லாமிய குடியரசு கூறிய அதே வேளையில், அமெரிக்காவின் மற்றொரு நட்பு நாடான ஜோர்டானில் அபாய ஒலி எழுந்தது; அங்கு ஈரானில் இருந்து ஏவப்பட்ட எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்தது.

பிப்ரவரி 28-ஆம் தேதியன்று, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் முதல் நாளில், கமேனி தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டார்.

ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இறுதிச் சடங்குகளின் கடைசி நிகழ்வான, மஷ்ஹத்தில் நடந்த கமெனியின் நல்லடக்கம், இன்னும் பொதுவெளியில் தோன்றாத மொஜ்தபா கமெனியின் தடயங்களுக்காக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.