உலகம்

ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து டிரம்பிடம் வலியுறுத்திய நெதன்யாகு

இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை போர்க்களத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான எந்தவொரு இறுதி ஒப்பந்தமும், இஸ்லாமிய குடியரசின் "அணுசக்தி அச்சுறுத்தலை" முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தானும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உடன்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

சனிக்கிழமை இரவு இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலை நெதன்யாகு குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உரையாடல் பற்றி கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "மிகவும் நன்றாக நடந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

"ஈரானுடனான எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் அணுசக்தி அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதில் அதிபர் டிரம்பும் நானும் உடன்பட்டோம். இதன் பொருள், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் வசதிகளை அகற்றுவதும், செறிவூட்டப்பட்ட அணு பொருட்களை அதன் நிலப்பரப்பில் இருந்து நீக்குவதும் ஆகும்," என்று நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"அதிபர் டிரம்பை போலவே எனது கொள்கையும் மாறவில்லை: ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாது. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை போர்க்களத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் அது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.

இதுதவிர லெபனான் உட்பட அனைத்து முனைகளில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தற்காத்து கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமைக்கு டிரம்ப் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.