உலகம்

ஈரானின் பிரதான துறைமுக நகர கட்டிடத்தில் பயங்கர வெடிப்பு - பரபரப்பு சம்பவம்

இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர்.ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

மாலை மலர்

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் இன்று 8 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.

இதில் ஒரு நபர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வெடிப்பில் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த கடைகள் மற்றும் பல வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அதை ஈரான் அரசு ஊடகம் மறுத்துள்ளது.

எரிவாயு கசிவால் இந்த விபத்து நடந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது? இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா? என்பது குறித்து ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் கடற்படை ஈரானை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.