உலகம்

பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையிலிருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.அவர்கள் நேற்று அடாரி-வாகா எல்லையை அடைந்தனர் என தகவல் வெளியானது.

மாலை மலர்

இஸ்லமாபாத்:

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 1-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கைதிகளின் பட்டியல்களின்படி பாகிஸ்தானில் மொத்தம் 266 இந்திய கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் 49 சிவில் கைதிகள் மற்றும் 217 மீனவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் தண்டனை காலம் முடிந்த 22 இந்திய மீனவர்களை நேற்று கராச்சி மாலிர் சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவித்தனர். அவர்கள் அடாரி-வாகா எல்லை வழியாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என தகவல் வெளியானது.

இதில் 18 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் டையூ பகுதி மற்றும் ஒருவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.