மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது இரண்டு ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களில் 22 குழந்தைகளும் அடங்குவர் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா டெலிகிராம் செய்தி பரிமாற்ற செயலியில் தெரிவித்தார்.
"ஐந்து குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்," என்று அவர் கூறினார். ஒரு பெரிய தொழிற் கட்டிடத்திலிருந்து கரும்புகை அடர்த்தியாக வெளியேறும் புகைப்படத்தை அவர் பதிவிட்டார்.
இந்த தாக்குதலை "முற்றிலும் வஞ்சகமானதும் இழிவானதும்" என்று குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, முதல் தாக்குதல் நடந்த அரை மணி நேரத்திற்கு பிறகு, அவசர சேவைகளை குறிவைக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக இரண்டாவது ரஷ்ய ஆளில்லா விமானம் அந்த வணிக வளாகத்தை தாக்கியதாகவும் கூறினார்.
"இதுபோன்ற தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களுக்கு சற்றும் குறைவானவை அல்ல," என்று டெலிகிராமில் கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை பொறுப்பேற்க செய்யுமாறு உலகை வலியுறுத்தினார்.
போர்க்களத்தில் சண்டை நான்கரை ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் மீதான தனது வான்வழி போரை தீவிரப்படுத்தி வருகிறது. வியாழக்கிழமை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
மாஸ்கோவின் போரிடும் திறனைக் குலைக்கும் முயற்சியில், உக்ரைனும் ரஷ்யா மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, எண்ணெய் வசதிகள் மற்றும் தளவாட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்துள்ளது.