உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதி உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) அறிவிக்கப்பட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.
இந்தியாவில் 36 தளங்கள் பாரம்பரிய தளங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருதுகோளை மையமாக கொண்டு பாரம்பரிய தினம் கொண்டாடப்படும். அதே போல் இந்த ஆண்டு தலைமுறைகளுக்கான பாரம்பரியம் என்ற கருதுகோளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளை கொண்டாடும் விதமாக ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை செதுக்கியுள்ளார். #worldheritageday