பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 
செய்திகள்

பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்க்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி தனது ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார் என்ற ருசிகர தகவல் வெளியாகி இருக்கிறது.

மாலை மலர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் உணவகம் நடத்தி வரும் 63 வயதான தீவிர கிரிக்கெட் ரசிகர் முகமது பஷிருக்கு 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் மோதலை பார்க்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டோனி இலவசமாக டிக்கெட் வழங்கி வருகிறார் என்ற ருசிகர தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து முகமது பஷிர் மான்செஸ்டரில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை பார்ப்பதற்காக நேற்று இங்கிலாந்து வந்தேன். இந்த போட்டிக்கான ஒரு டிக்கெட்டுக்கு ரூ.80 ஆயிரம் வரை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இது நான் சிகாகோவுக்கு திரும்பும் விமான டிக்கெட் தொகைக்கு சமமானதாகும். இந்த போட்டிக்காக டிக்கெட் வாங்க நான் கஷ்டப்படவில்லை. அதற்கு காரணமான டோனிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

டோனி மிகவும் பிசியாக இருப்பார் என்பதால் அவரை நான் செல்போனில் அழைப்பது கிடையாது. குறுந்தகவல்கள் அனுப்பி அவருடனான எனது பழக்கத்தை தொடர்ந்து வருகிறேன். டிக்கெட் தருவதாக டோனி உறுதி அளித்ததாலேயே முன்கூட்டியே இங்கு வந்தேன். டோனி மிகுந்த மனிதநேயம் மிக்கவர். 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இருந்து எனக்கு அவர் டிக்கெட் வழங்கி வருகிறார். எனக்கு டோனி செய்வது போல் வேறு யாரும் செய்வார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியாது. எனக்கு இலவசமாக ஒரு டிக்கெட் கிடைப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.