தேனி:
தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் 30 ஆயிரத்து 751 தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த நிவாரணப் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.
தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கு தொழிலாளர்கள் நேற்று குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், நெருக்கமாக நின்றனர். பின்னர், ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களை இடைவெளிவிட்டு வரிசையில் நிற்க அறிவுறுத்தினர். அதுபோல், மாவட்டத்தில் மேலும் சில இடங்களிலும் நிவாரணம் பெற தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக கூடி நின்றனர்.
எனவே ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் வீடுதேடி வழங்கப்பட்டது போல், அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் வீடுதேடிச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கவோ, அல்லது டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கூட்டம் சேரவிடாமல் பொருட்கள் வழங்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.