புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பை சேர்ந்தவர் ரவி (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மாணிக்க செட்டியார் நகர் 5-வது குறுக்கு தெருவில் ஒரு மளிகை கடை முன்பு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரவிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் எந்த நேரமும் அவர் மேட்டுப்பாளையம் சாராய கடையிலேயே குடித்து விட்டு அங்கேயே இருப்பார்.
இதனால் போலீசார் அந்த சாராய கடையில் உள்ள சி.சி.டி. கேமராவில் உள்ள பதிவுகளை சோதனை செய்தனர். அதில், ரவி மட்டும் சாராயம் குடித்து செல்வது பதிவாகி இருந்தது. வேறு யாரும் அவருடன் செல்லவில்லை.
மேலும் அங்கு சாராயம் குடிக்கும் பலரிடம் விசாரணை நடத்தினர். சமீபத்தில் ரவியின் அக்காள் அவருக்கு சொத்து ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த சொத்து ரவியின் பெயரிலேயே இருந்துள்ளது.
சொத்து பிரச்சினைக்காக யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரித்தனர்.
மேலும் ரவியை கொலை செய்தவர்கள் ஒருவராக இருக்க வாய்ப்பு இல்லை. கொலை செய்தவர்கள் அருகில் இருந்த 4 செங்கற்களை எடுத்து வந்துள்ளனர். ஒருவராக இருந்தால் ஒன்று அல்லது 2 செங்கற்கள்தான் எடுத்திருக்க வேண்டும்.
எனவே, கொலையாளிகள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கலாம் என கருதி போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.