செய்திகள்

செல்போன் தகராறில் தொழிலாளியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டையில் செல்போன் தகராறில் தொழிலாளியை கொன்ற வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை காமராஜபுரம் 17ம் வீதியில் கடந்த 15.3.2015ம் தேதி பழனி என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் செந்தில் குமார் ஆகியோருக்கும் இடையே செல்போன் திருட்டு தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது பழனிக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி நாராயணன் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில் குமார், செல்வம் ஆகியோர் கத்தியால் நாராயணனை குத்திக் கொலை செய்தனர்.

இந்த கொலை குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு விசாரணை புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி சாய்பிரியா நாராயணனை கொலை செய்த குற்றத்திற்காக செல்வம் மற்றும் செந்தில் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து குற்றவாளிகள் இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.