தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவாசல் பொந்திரிபாயைத்தை சேர்ந்தவர் விஜி (வயது 37). கூலி தொழிலாளி. இவர் கடந்த 28-ந் தேதி காலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது பற்றி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தஞ்சையில் நடந்த ஒரு கொலையில் விஜி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக விஜிக்கும் வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் சாலையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சங்கர் (40), ஆகாஷ் (23) ஆகியோருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு பழிக்கு பழிக்கு வாங்கும் விதமாக விஜி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த கொலையில் சங்கர், ஆகாஷ், பிரதீபன் (23), தினேஷ் (24), கோபி (29) ஆகிய 5 பேருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் வேறு யாருக்காவது இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சங்கர், ஆகாஷ் உள்பட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மதியம் அவர்கள் 5 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் தஞ்சை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.