கன்னியாகுமரி:
மயிலாடி அருகே உள்ள அமராவதிவிளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார்.
நேற்று மாலை இவர் அங்குள்ள பெரியகுளத்துக்கு குளிப்பதற்காக சென்றார். ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கினார். அவருடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ராஜேந்திரனை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலை யத்துக்கும், அஞ்சு கிராமம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி முருகேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி ராஜேந்திரனை தேடினர்.
பல மணிநேர தேடுதலுக்கு பிறகு இரவு 11 மணிக்கு ராஜேந்திரன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் உடலை போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலியான ராஜேந்திரனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.