ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் மாதவன் (45). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி வாசுகி. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் -மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது.இதனால் வாசுகி கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது அண்ணன் முருகேசன் வீட்டிற்கு சென்றார்.
நேற்று இரவு குடிபோதையில் அங்கு வந்த மாதவன் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த முருகேசன் கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறி உள்ளார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து மாதவனின் முகத்தில் தூவி விட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் மாதவன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார். உடனே முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் ஒரத்தநாடு டி.எஸ்.பி செங்கமலக் கண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி முருகேசன் தஞ்சையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் தஞ்சை விரைந்துள்ளனர்.