வில்லியனூர்:
வில்லியனூர் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 56). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கு திருமணமாகி விட்ட நிலையில் 4-வது மகளுக்கு நேற்று திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் திருமணம் நடைபெற்றது. ரவிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மதுகுடித்து விட்டு திருமண நிகழ்ச்சியில் ரகளை செய்வார் என கருதி ரவியை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வேதனை அடைந்த ரவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தொங்கினார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் ரவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் வில்லியனூர் அருகே மேல்சாத்தமங்கலம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் ஜோதிபாபு. கார் டிரைவர். இவரது மனைவி பத்மபிரியா (20). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தையும், 20 நாளே ஆன பெண் குழந்தையும் உள்ளது.
சம்பவத்தன்று ஜோதிபாபு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது பத்மபிரியா பத்திய குழம்பு மட்டும் வைத்து இருந்தார். ஆனால், தனக்கு ஏன் தனியாக குழம்பு தயார் செய்யவில்லை என கூறி ஜோதிபாபு மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் ஜோதிபாபு சாப்பிடாமல் தூங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் கணவன் திட்டியதால் மனமுடைந்த பத்மபிரியா சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பத்மபிரியாவுக்கு திருமணமாகி 3 வருடமே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.