செய்திகள்

கேரளாவில் கொட்டி தீர்த்த மழை- பெரியாறு, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியாறு மற்றும் வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #KeralaRain #MullaPeriyar #VaigaiDam

கேரளாவில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கன மழைக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 134.40 அடியாக உள்ளது.

எனவே இந்த முறையாவது 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்குபோக வைகை அணையை வந்தடைகிறது.

நேற்று 1596 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 2465 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.24 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.