தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்கள் முன்பு நின்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய பெ 
செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் அஞ்சலி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கன்னியாகுமரியில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மாலை மலர்

நாகர்கோவில்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை கிராமங்களிலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இதில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராஜ் மற்றும் ஆல்பின், ஜான்மில்டன், சேவியர், சிலுவை தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராஜாக்கமங்கலம்துறை பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், மணக்குடி பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.#SterliteProtest