சென்னை:
மகளிர் தினவிழாவையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காலை 11.50 மணிக்கு வந்தனர்.
தலைமை கழகத்திற்கு சென்ற அவர்கள் சுமார் 10 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலஉதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று தையல் மிஷின், அயன் பாக்ஸ், இட்லி குக்கர், தள்ளு வண்டி, சேலை உள்ளிட்டவைகளை வழங்கினார்கள். 585 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த், இணை செயலாளர் கீர்த்திகா ஆகியோர் கேக் வெட்டி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் ராஜ லட்சுமி, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், சேவூர் ராமச் சந்திரன், கடம்பூர் ராஜூ மற்றும் பாலகங்கா, வி.என். ரவி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், கமலக்கண்ணன், சின்னையன், தி.நகர் சத்யா, மின்சார சத்ய நாராயணமூர்த்தி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீண்டும் தலைமை கழகத்திற்கு சென்று 15 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள். #Tamilnews