பள்ளிப்பட்டு:
பள்ளிப்பட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அம்மையார் குப்பம் - பாலாபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் அண்ணா துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.