செய்திகள்

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: தொடக்க விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 320 ரன்கள் குவித்து சாதனை

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையேயான லீக் ஆட்டத்தில் இந்திய ஜோடி 320 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

மாலை மலர்

போர்ட்செப்ஸ்ட்ரூம் :

தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா-பூனம் ராவுத் ஜோடி 320 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.

பெண்கள் கிரிக்கெட் போட்டியில் எந்தவொரு விக்கெட்டுக்கும் இதற்கு முன்பு 300 ரன்கள் எடுக்கப்படவில்லை. தீப்தி ஷர்மா 160 பந்துகளில் 27 பவுண்டரி, 2 சிக்சருடன் 188 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 12 ரன்னில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை கைநழுவவிட்டார். பூனம் ராவுத் 109 ரன்கள் (116 பந்துகளில் 11 பவுண்டரியுடன்) எடுத்த நிலையில் காயத்தால் ஓய்வு பெற்றார். பூனம் ராவுத் 28 ரன்னை எட்டிய போது ஒருநாள் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார்.

பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆடிய அயர்லாந்து அணி 40 ஓவர்களில் 109 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 249 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.