செய்திகள்

ராஜபாளையம் அருகே சொத்து பிரச்சினையில் பெண் கொடூர கொலை - மகன் வெறிச்செயல்

சொத்து பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த மகன் பெற்ற தாயை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சொக்கநாதன் புத்தூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பார்வதி (வயது 60). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார். அதற்கு முன்பாகவே தனது சொத்துக்களை மகன்கள், மகளுக்கு முறையாக எழுதி கொடுத்து விட்டார்.

வேதகோவில் தெருவில் உள்ள பூர்வீக வீட்டை மட்டும் தனது மனைவிக்கு எழுதி கொடுத்து இருந்தார். கணவர் இறந்த பிறகு பார்வதி அந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மூத்த மகன் சிவகாமிநாதன் (45) பூர்வீக வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு பார்வதியிடம் கேட்டு உள்ளார். அதற்கு தான் இறந்த பிறகு அந்த வீட்டை எடுத்துக்கொள் என்று தெரிவித்து விட்டார்.

இதை ஏற்கமறுத்த சிவகாமிநாதன் அடிக்கடி தாயாரிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் சொத்து தொடர்பாக தாய்- மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவகாமிநாதன் பெற்ற தாய் என்றும் பாராமல் சொத்துக்காக பார்வதியை அரிவாளால் சராமரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பார்வதியின் மற்றொரு மகன் புதுராஜா சேத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமாரவேல் வழக்குப்பதிவு செய்து சொத்துக்காக தாயை கொன்ற சிவகாமிநாதனை கைது செய்தார். #tamilnews

SCROLL FOR NEXT