செய்திகள்

4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புதிருமணம் செய்த பெண், 2 குழந்தைகள் படுகொலை - உறவினர் வெறிச்செயல்

ஆந்திர மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் அவரது உறவினர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #HonourKilling

நகரி:

ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்ட கார்லதின்ன கிராமத்தை சேர்ந்த சிவய்யா மகள் மீனாட்சி (வயது24). அதே ஊரை சேர்ந்த நல்லப்பா என்னும் வேற்று மத வாலிபரை காதலித்து குடும்பத்தினரை எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மீனாட்சியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்து எந்த சுப காரியத்திற்கும் அழைப்பதில்லை. மீனாட்சி- நல்லப்பா தம்பதிகளுக்கு விதேஷ் (வயது3), கீர்த்தி1) குழந்தைகள் பிறந்தனர்.

குழந்தைகளை பார்த்த மீனாட்சியின் பெற்றோர் மற்றும் சகோதர-சகோதரிகள் மீனாட்சியுடன் பேசுவதும், அவர் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதும் ஒன்றுசேர ஆரம்பித்தனர். இதை கவுரவக் குறைவாக நினைத்த மீனாட்சியின் சித்தப்பா மகன் ஹரி ஆத்திரமடைந்தார்.

ஏற்கனவே மீனாட்சி தம்பதியினரை ஊரை விட்டு ஓடிபோய் விட வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்த ஹரிக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று கத்தியுடன் வீட்டில் புகுந்து மீனாட்சி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மீனாட்சியின் மாமியார் சுப்பம்மா காலை பிடித்து கெஞ்சினார் ஆனாலும் உதரி தள்ளி படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு நிதானமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

மோட்டார் சைக்கிளில் ஊரைவிட்டு தப்பியோட முயன்ற ஹரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #HonourKilling

SCROLL FOR NEXT