விசாரணை 
செய்திகள்

பெண் ஊழியர் பாலியல் புகார் - அதிகாரிகள் விசாரணை

பெண் ஊழியர் பாலியல் புகார் தொடர்பாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர், சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

மந்தாரகுப்பம்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியில் அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நெய்வேலி அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செந்தமிழ்செல்வி (வயது 33). இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கொடுத்த புகார் மனுவில், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் பெலிக்ஸ் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன் ஆகியோர் அரசு பள்ளிக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆசிரியரிடம் இதுதொடர்பாக தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அதோடு தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் படி கடிதம் பெற்று சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெறப்பட்ட கடிதங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் கடிதத்தில் உள்ள விபரங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.