கரூர்:
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்குகாந்திகிராமம் பாரதிநகரை சேர்ந்தவர் மோகனாம்பாள் (வயது 42). இவரது மகன் முரளி, ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாகவும், கடந்த 10-ந்தேதி முதல் 2 பேரையும் காணவில்லை எனவும் சிவகிரி போலீஸ் நிலையத்தில் காணாமல்போன பெண்ணின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மோகனாம்பாள் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து காணாமல் போன பெண்ணின் பெற்றோார்கள் அந்த பெண்ணை தங்களிடம் ஒப்படைக்கு மாறு மிரட்டுவதாக கூறி, தனது பையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடல் மீது ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரியின் உதவியாளர்கள் அந்த பெண்ணிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கி அழைத்து சென்றனர். இதன் பேரில் தாந்தோணிமலை கிராம நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், மோகனாம்பாள் கலெக்டர் அலுவலகத்திற்குள் அத்து மீறி உள்ளே நுழைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து, மோனாம்பாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.