லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இருந்து கவுதம் புத்தா நகருக்கு, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு பேருந்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார். பேருந்தின் கடைசி படுக்கையில் படுத்து தூங்கிய அந்த பெண்ணை, டிரைவர்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார். ஆனால், பேருந்து கவுதம் புத்தா நகரை அடைந்ததும், அந்த பெண் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.
நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்துவரும் தன் கணவரை பார்ப்பதற்காக அந்த பெண் சென்றுள்ளார். இரவு நேரத்தில் மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, கடைசி படுக்கையில் இருந்த பெண்ணை டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகவும், லக்னோ-மதுரா இடையே இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.