செய்திகள்

பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் புகார் - தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க முடிவு

பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #VishakaCommittee #NationalCommissionForWomen

மாலை மலர்

சென்னையில் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தனது மேல் அதிகாரியான போலீஸ் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே துறையில் இருவரும் பணியாற்றிய போது வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்த பெண் அதிகாரியை வரவழைத்துள்ள போலீஸ் ஐ.ஜி. செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

பெண் சூப்பிரண்டின் செல்போனுக்கும் ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் ஐ.ஜி. அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு துறையில் பணியாற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நாடு முழுவதும் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல் துறையில் காலியாக இருந்த இந்த கமிட்டியில் புதிதாக உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.

சீமா அகர்வால்

கூட்டத்தில் பெண் போலீஸ் சூப்பிரண்டு அளித்த புகார் தொடர்பாக ஐ.ஜி. மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெண் அதிகாரியையும், ஐ.ஜி.யையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் சம்மன் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விசாகா கமிட்டி தொடர்ந்து இந்த விவகாரம் பற்றிய விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் அதிகாரியின் பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணைம் தாமாகவே முன் வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த பாலியல் புகார் பற்றி நாளிதழ்களில் வந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு தாமாகவே இந்த விசாரணையை நடத்த தேசிய மகளிர் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இதுபற்றி மகளிர் ஆணைய நிர்வாகிகள் விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

குறிப்பிட்ட குற்றச்சாட்டு குறித்து மகளிர் ஆணையம் உடனடியாக புகாருக்குள்ளான நபருக்கு சம்மன் அனுப்ப முடியாது. ஆணையத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூடி விவாதித்த பிறகே ஆணையம் உரிய முடிவை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி மகளிர் ஆணையத்தின் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் ஆலோசனை நடத்தி போலீஸ் ஐ.ஜி.க்கு சம்மன் அனுப்பவும் மகளிர் ஆணையம் முடிவு செய்து இருக்கிறது.