மதுரை:
திண்டுக்கல் இந்து அறநிலையத்துறை அதிகாரி அனிதா. இவர், மதுரை மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயாவிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 28-ந்தேதி மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட சென்றேன்.
பின்னர் அங்குள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அறையில் தங்கினேன். அப்போது அங்குள்ள கழிப்பறை, குளியல் அறையில் மறைவான இடத்தில் கேமிரா வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அதை ஆய்வு செய்தபோது அங்கு தங்கியிருந்த பெண் ஊழியர்களின் நடவடிக்கைகள் பதிவாகி இருந்தது.
இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட டி.ஐ.ஜி. உடனே நடவடிக்கை எடுக்குமாறு சாப்டூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பேரையூர் டி.எஸ்.பி. மதியழகன் மற்றும் போலீசார் பச்சையப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே சுந்தர மகாலிங்கம் கோவில் சிலைகள் திருட்டு போனது தொடர்பான வழக்கும் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பெண் அதிகாரி அனிதா மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் செயல் அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.