சந்திராவின் வீட்டு சுவர் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

அம்மாபேட்டை அருகே மழையில் வீட்டு சுவர் இடிந்து பெண் பலி

அம்மாபேட்டை அருகே மழையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த ஒலகடம் குட்டை மேடு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி சந்திரா (வயது 57). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

மகனுக்கு திருமணமாகி தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார். அருகே உள்ள கீற்று கொட்டகையில் சந்திரா வசித்து வந்தார். இவர் திருமண பெண் புரோக்கர். அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று இரவு வழக்கம் போல சந்திரா தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். இரவில் லேசாக மழை தூறிக்கொண்டு இருந்தது.

இன்று அதிகாலை 4 மணி அளவில் சந்திரா வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

அந்த சுவர் சந்திரா மீது விழுந்து நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறையினர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்டு சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.