பேரையூர்:
சிந்துப்பட்டி போலீஸ் சரகத்தில் உள்ள பேய்க்காமபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 30). இவரது மனைவி பவுன் (27). கணவனும், மனைவியும் திருமங்கலம் அருகே சித்தாலையில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோவிலுக்கு மொபட்டில் புறப்பட்டனர்.
அவர்களை பின் தொடர்ந்து மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் மர்ம மனிதர்கள் இருவரும் சுந்தரபாண்டி, பவுன் சென்று கொண்டிருந்த மொபட்டை எட்டி உதைத்தனர்.
இதனால் மொபட் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அந்த சமயத்தில் மர்ம மனிதர்கள் இருவரும் பவுனின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர்.
நகையை பவுன் இறுக்கி பிடித்துக் கொண்டார். இருப்பினும் கொள்ளையர்கள் வேகமாக இழுந்ததால் தங்கச்சங்கிலி அறுந்தது. தங்களிடம் சிக்சிய 4 பவுன் நகையுடன் கொள்ளையர்கள் தப்பி விட்டனர்.
மொபட்டில் இருந்து கீழே விழுந்த பவுனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.