பெண்ணிடம் நகை பறிப்பு 
செய்திகள்

பளுகல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 1½ பவுன் செயின் பறிப்பு

பளுகல் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 1½ பவுன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

பளுகல் பண்டாரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுசீலா (வயது 68).

இவர் நேற்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று இருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பினார். ஆலம்பாறை அருகே வரும்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சுசீலாவின் அருகே வந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் செயினை பறித்தார். இதில் சுதாரித்துக்கொண்ட சுசீலா செயினை பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவரது கையை தட்டிவிட்டு அவர் அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பளுகல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுசீலா கூறிய அடையாளங்களைக் கொண்டு போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.