மரணம் 
செய்திகள்

புவனகிரியில் பெண் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

புவனகிரியில் வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

புவனகிரி:

புவனகிரி சின்னப்ப முதலியார் தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் வேல்முருகன்(வயது 42). இவருக்கும் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகள் பானுமதி(39) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பானுமதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இதுபற்றி அறிந்த புவனகிரி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து பானுமதியின் தாய் உஷாராணி புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.