செய்திகள்

ஜிப்மர் ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற பெண்

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிக்கு கழிவறையில் பெண் குழந்தை பிறந்தது. #JipmerHospital

புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (24). இவர் கர்ப்பம் அடைந்திருந்தார்.

பிரசவத்துக்காக சுதாவை உறவினர்கள் கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து இருந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

அதைத்தொடர்ந்து சுதா பிரசவத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பிறக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், சுதா பிரசவ வலியால் துடித்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சுதா சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் அவரையும், குழந்தையையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.

இதற்கிடையே சுதாவின் உறவினர்கள் ஜிப்மர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அலட்சியம் காரணமாகத்தான் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JipmerHospital