மின்சாரம் தாக்கி பலியான காட்டெருமை . 
செய்திகள்

அரூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டெருமை பலி- விவசாயி கைது

அரூர் அருகே மின்வேலியில் சிக்கி காட்டெருமை ஒன்று இறந்துள்ளது. திருட்டுத்தனமாக வேலி அமைத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

அரூர்:

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 43). இவருக்கு பள்ளிப்பட்டி அடுத்துள்ள காப்புக்காடு பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் வரக் கூடாது என்பதற்காக, திருட்டுத்தனமாக அரசு மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை எடுத்து மின்வேலி அமைத்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று இந்த மின்சார வேலியில் அடிபட்ட காட்டெருமை ஒன்று இறந்துள்ளது. இந்த தகவல் வனத்துறைக்கு தெரியவர, வனசரகர் தங்கராஜ், வனவர் தமிழரசன், மணிகண்டன் மற்றும் மாறி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்து உறுதி செய்த வனத்துறையினர் கோவிந்தசாமியை மாவட்ட வன அதிகாரி இடம் அழைத்து சென்றனர்.

இது குறித்து மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார் கோவிந்தசாமி இடம் விசாரணை நடத்தி வனவிலங்கு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.