செய்திகள்

மதுபாட்டில்களை தோரணமாக தெருக்களில் தொங்கவிட்டு கிராம மக்கள் போராட்டம்

மதுவிற்பனையை தடை செய்ய கோரி காலி மதுபாட்டில்களை தோரணமாக தெருக்களில் தொங்கவிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் கிராமம் உள்ளது. இங்குள்ள இச்சிலடி தெருவில் சிலர் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து குறைவான விலையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த தெருவுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில்வரும் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இரவு- பகல் என 24 மணி நேரமும் ஆட்கள் தெருவில் நடமாட்டம் இருந்து வந்தால் அப்பகுதி பெண்கள் நிம்மதியாக வெளியே நடமாட முடியாமல் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் தெருவில் மதுவிற்பனையை கண்டித்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம நடத்தினர்.

இச்சிலடி தெரு முழுவதும் காலி பாட்டில்களை தோரணமாக கட்டி தொங்கவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்தனர். தெருவில் கட்டப்பட்ட மதுபாட்டில் தோரணங்களை அப்புறப்படுத்தினர்.

பின்னர் கிராம மக்களிடம் , மதுவிற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று திரண்டு நின்ற கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

நூதன முறையில் மதுபாட்டில்களை தோரணமாக தொங்கவிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் கொள்ளிடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.