செய்திகள்

விம்பிள்டன்: மேட்ச் பிக்சிங் விசாரணை வளையத்தில் மூன்று போட்டிகள்

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின்போது மூன்று போட்டிகளில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக எழுந்த புகார் குறித்து டென்னிஸ் நேர்மை அலகு விசாரணை நடத்த இருக்கிறது.

மாலை மலர்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் முக்கியமானதாக விம்பிள்டன் தொடர் விளங்கி வருகிறது. சமீப காலமாக டென்னிஸ் வீரர்கள் மீது மேட்ச் பிக்சிங் ஊழல் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த மேட்ச் பிக்சிங் ஊழல் தொடர்பாக சில வீரர்கள் தண்டனையும் பெற்றுள்ளனர்.

தற்போது முடிவடைந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றின்போது இரண்டு போட்டிகளிலும், முக்கிய சுற்றுப் போட்டிகளில் ஒரு போட்டியிலும் மேட்ச் பிக்சிங் நடந்ததாக தகவல் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் மூன்று போட்டிகளை மறுஆய்வு செய்வதற்கு டென்னிஸ் நேர்மை அலகு முடிவு செய்துள்ளது. அந்த குற்றச்சாட்டில் போட்டி மற்றும் வீரர்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. எச்சரிக்கை தகவல், மேட்ச் பிக்சிங் செய்ததற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதனை கருத்தில் கொண்டு போட்டிகளை ஆராய உள்ளது நேர்மை அலகு.

விம்பிள்டனுக்கு முன் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபனிலும் இதுபோன்ற மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக தகவல் வெளியானது என்று டென்னிஸ் நேர்மை அலகு தெரிவித்துள்ளது.