டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருருடன் பிஷன் சிங் சவுபால், சுவோத் உனியால், அரவிந்த பாண்டே, கணேஷ் ஜோஷி, தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, யதீஷ்வரன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த புஷ்கர் சிங் தாமி, கொரோனா இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும், மாநிலத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு இளைஞர்களை நியமிக்க நினைத்திருப்பதாகவும் கூறினார்.
கட்சி தலைமை முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததால் எம்எல்ஏக்கள் பலர் அதிருப்தி அடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த புஷ்கர் சிங் தாமி, இளைய மற்றும் மூத்த உறுப்பினர்களை ஒன்றாக வைத்திருப்பதுடன், கட்சி மற்றும் அரசுப் பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வது தனது கடமை என்றார்.
சிரமங்கள் இருந்தபோதிலும், மாநிலத்தில் சுற்றுலா மற்றும் சார் தாம் யாத்திரை மீண்டும் தொடங்குவது அவசியமானது என்றும் புஷ்கர் சிங் தாமி கூறினார்.