திருவனந்தபுரம்:
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்- மந்திரியாக பினராயி விஜயன் இருந்து வருகிறார்.
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கணூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராமச்சந்திரன் நாயர் இருந்துவந்தார். இந்த தொகுதி 1991-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதியாகும்.
கடந்த தேர்தலில் அந்த தொகுதியை காங்கிரசிடம் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மரணமடைந்தார்.
இதைதொடர்ந்து இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளராக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆலோசனையில் முதல்-மந்திரி பினராயி விஜயனும் அந்த கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக நடிகை மஞ்சுவாரியரிடம் அவர்கள் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது. #ManjuWarrier #Chengannur #Byelection