செய்திகள்

நீல திமிங்கல விளையாட்டு இணைப்புகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

நீல திமிங்கல விளையாட்டு இணைப்புகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சிறுவர்-சிறுமிகள் மற்றும் இளைய தலைமுறையினரை காவு வாங்கி வரும் புளூ வேல் (நீல திமிங்கலம்) எனப்படும் விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்த விளையாட்டு தொடர்பான இணைப்புகளை உடனே நீக்குமாறு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றாத இணையதள அடிப்படையிலான சமூக ஊடக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது:-

புளூ வேல் விளையாட்டு மூலம் மக்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

எனவே இது தொடர்பான இணைப்புகளை நீக்குமாறு அனைத்து தொழில்நுட்ப தளங்களுக்கும் நாங்கள் தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். ஏனெனில் இளம் சிறார்களை தற்கொலைக்கு தூண்டும் எந்த நடவடிக்கைக்கும் இந்திய தொழில்நுட்ப சூழியல்படி அனுமதியில்லை. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விடுத்துள்ள வழிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

SCROLL FOR NEXT