பெரியபாளையம்:
வெங்கல் அருகே உள்ள கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 45) கொத்தனார். இவரது மனைவி ஞானம்மாள் (40). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
வேலு வேலைக்கு செல்லும்போது பெண்களுடன் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது நடத்தையில் மனைவி ஞானம்மாளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகராறு இன்று அதிகாலை வரை நீடித்தது. ஆத்திரம் அடைந்த வேலு திடீரென மனைவியை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த ஞானம்மாள் அருகில் இருந்த கிரைண்டரின் கல்லை எடுத்து வேலுவின் தலையில் தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் ஞானம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்தபோது வீட்டில் அவர்களது மகனும், மகளும் இருந்துள்ளனர்.
கணவனை மனைவி அடித்து கொன்ற சம்பவம் வெங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.