செய்திகள்

வெள்ளகோவிலில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்- தொழிலாளி தற்கொலை

வெள்ளகோவிலில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம் பிடித்ததால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்த கொண்டார்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் முத்தூர் தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லட்சுமி திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் லட்சுமிக்கும் அதே ஊரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் தெரிந்ததும் ஜெகநாதன் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று வேலைக்கு சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் லட்சுமியை கண்டு பிடிக்கமுடிய வில்லை. இதனால் விரக்தியில் இருந்த ஜெகநாதன் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஜெகநாதனின் தந்தை வீரன் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். அதில் எனது மருமகளும், இதே பகுதியை சேர்ந்த வாலிபரும் பழகி வந்தனர். இதனை எனது மகன் தட்டிக்கேட்டார். இதனால் மருமகள் லட்சுமி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். அந்த விரக்தியில் இருந்த எனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.