சுட்டுக்கொல்லப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதி, தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் கார்த்திக்வேல். 
செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவியை போலீஸ்காரர் சுட்டு கொன்றது ஏன்?- திடுக்கிடும் தகவல்கள்

மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. #ChennaiCop #LoverShotDead

மாலை மலர்

மருத்துவ கல்லூரி மாணவி சரஸ்வதியை வேலூர் போலீஸ்காரர் கார்த்திக்வேல் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். மாணவி சரஸ்வதியை கார்த்திக்வேல் சுட்டுக்கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

மாணவி சரஸ்வதி பிளஸ்-2 படித்தபோது பேஸ்புக் மூலம் போலீஸ்காரர் கார்த்திக்வேலுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சரஸ்வதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

பின்னர் போலீஸ்காரர் கார்த்திக்வேல் வேலூரில் இருந்து சென்னை வந்து சரஸ்வதியை அடிக்கடி சந்தித்தார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவந்தனர். கார்த்திக்வேல் தனது ஊரில் உள்ளவர்களிடம் மருத்துவ கல்லூரியில் படிக்கும் சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிவந்தார். தன்னுடன் பணியாற்றும் போலீசாரிடமும் இந்த தகவலை அவர் தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில் மாணவி சரஸ்வதி அந்த கல்லூரியில் உள்ள ஒரு மாணவருடன் பேசுவதாக கார்த்திக்வேலுக்கு தகவல் கிடைத்தது. இதனால் சரஸ்வதி மீது கார்த்திக் வேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தான் உயிருக்கு உயிராக காதலித்த சரஸ்வதி தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாரோ? என்று நினைத்தார். வேறுஒரு மாணவருடன் பேசுவது ஏன் என்று அவர் சரஸ்வதியிடம் கேட்டார். இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதமாக இருவரும் பேசாமல் இருந்துவந்தனர்.