செய்திகள்

தென்னிந்தியாவில் முதல்முறையாக நீலகிரி வனப்பகுதியில் வெள்ளை புலி நடமாட்டம்

தென்னிந்திய வனப்பகுதிகளில் வெள்ளை புலிகள் இருந்ததாக பதிவு ஏதும் இல்லை என்றும், நீலகிரி பூகோள பகுதியில் வெள்ளை புலியை கண்டறிவது இதுவே முதல்முறை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை:

நீலகிரி மாவட்டத்தில் வடக்கு, தெற்கு கோட்டம், முதுமலை புலிகள் சரணாலயம் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன.

இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்டவை வாழ்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வன ஆர்வலரும், புகைப்படக் கலைஞருமான பெங்களூரை சேர்ந்த நிலஞ்சன் ராய் என்பவர் நீலகிரி வனப்பகுதிகளில் புகைப்படங்கள் எடுத்தார்.

அப்போது 2 புலிகள் ஒன்றாக இருந்ததை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தார். இதில் ஒன்று வெள்ளை புலி என தெரிய வந்தது. உடனே அவர் அபூர்வமாக கிடைத்த இப்படங்களை உலகளவில் புலிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைத்தார்.

புலிகளை பொறுத்தவரை ஜீன் கோளாறு காரணமாக தோல் நிறத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் 1980-ம் ஆண்டுகளில் உத்தரபிரதேச வனப்பகுதிகளில் வெள்ளை புலிகள் இருந்துள்ளது.

தென்னிந்திய வனப்பகுதிகளில் வெள்ளை புலிகள் இருந்ததாக பதிவு ஏதும் இல்லை என்றும், நீலகிரி பூகோள பகுதியில் வெள்ளை புலியை கண்டறிவது இதுவே முதல்முறை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.