செய்திகள்

வடகொரிய அதிபரின் மனநலம் குறித்து கேள்வி எழுப்பும் வெள்ளை மாளிகை

அமெரிக்காவை தொடர்ந்து சீண்டி வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மனநலம் குறித்து வெள்ளை மாளிகை கேள்வி எழுப்பியுள்ளது.

மாலை மலர்

வாஷிங்டன்:

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. விதித்துள்ள பொருளாதார தடைகளையும் மீறி வட கொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதனை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வந்தது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும்  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது.  

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச்செல்லக்கூடிய  ஏவுகணைகளும் தங்களிடம் இருப்பதாகவும், இவற்றை இயக்குவதற்கான பொத்தான் தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார். 

வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய அமெரிக்க அதிபர்  டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபரிடம் இருப்பதை விட மிகவும் பெரிதான சக்தி வாய்ந்த அணு ஆயுத கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருப்பதாக கூறினார். 

இவ்வாறாக இரு தலைவர்களுக்கும் இடையே, வார்த்தைப்போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, கிம் ஜாங் உன் மனநலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், சாரா சாண்டர்ஸ் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கிம் ஜாங் உன் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். 

“வடகொரிய தலைவரின் மனநலம் குறித்து அமெரிக்க அதிபரும் மக்களும் கவலைப்படுகின்றனர்.  ஏனெனில், தொடர்ந்து அவர் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஏவுகணை சோதனைகளை மீண்டும் மீண்டும் நடத்தி வருகிறார்” என்று சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.