செய்திகள்

வரவேற்க காத்திருந்த ஆசிரியருக்காக காரை நிறுத்திய மந்திரி: சுவாரஸ்ய பிளாஷ்பேக்

பிரம்பால் அடித்த முன்னாள் ஆசிரியர் கல்வித்துறை மந்திரியான பின்னர் தன்னை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருந்த சம்பவத்தை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நினைவுகூர்ந்தார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் லக்னோ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்றார்.

இவ்விழாவில் பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

நான் ஆரம்ப பள்ளியில் படித்தபோது எங்களது உடல்கல்வி ஆசிரியர் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களை பிரம்பால் அடித்து தண்டிப்பார். அதன்பிறகு நாங்கள் நல்லபடியாக நடந்து கொள்வோம்.

நான் உத்தரப்பிரதேசம் மாநில கல்வித்துறை மந்திரியான பின்னர் ஒருநாள் எனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். சன்டவுலி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த சுமார் 90 வயது முதியவரை கண்டேன். அவர் எனது உடல்கல்வி ஆசிரியர் என்பதை அறிந்து என் காரை நிறுத்துமாறு கூறினேன்,  

என்னை வரவேற்பதற்காக அவர் கையில் ஒரு பூமாலையுடன் காத்திருந்தார். அந்த மாலையை வாங்கி அவரது கழுத்தில் அணிவித்து, காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றேன். இதைகண்ட எனது முன்னாள் ஆசிரியர் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்து விட்டார். நானும்  உணர்ச்சிவசமாகி விட்டேன்

அதுபோல் மாணவர்களாகிய நீங்களும் ஆசிரியப் பெருமக்களை எப்போதும் அன்போடும் மரியாதையோடும் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.