செய்திகள்

எப்போது வருவீர்கள்? கிராம நிர்வாக அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிய முன்னாள் கவுன்சிலர்

கணியூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களே, தாங்கள் அலுவலகம் எப்போது வருவீர்கள் என்பதை தெரியப்படுத்தவும் என்று முன்னாள் கவுன்சிலர் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை கணியூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. கல்வி மற்றும் சொத்து சம்பந்தமான சான்று பெற கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து பெற வேண்டியுள்ளது. இதனால் இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வருகிறார்கள்.

ஆனால் இந்த அலுவலகம் எப்போதும் பூட்டியே இருந்தது. களப்பணி அல்லது தாசில்தார் அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் சான்றுகள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் எங்கு செல்கிறார் என்பது குறித்த விபரம் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் தினந்தோறும் வந்து ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

இந்நிலையில் முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒரு நோட்டீஸ் எழுதி ஒட்டினார். அதில் ‘கணியூர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களே. தாங்கள் அலுவலகம் எப்போது வருவீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்’என்று எழுதி செல்போன் எண்ணையும் எழுதியிருந்தார்.

இந்த நோட்டீசை அந்த பகுதி மக்கள் பார்த்துச்சென்றனர். சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். அது வைரலாக பரவி வருகிறது.